இனி காதல் கவிதைகள் எழுதவதில்லை
என முடிவெடுத்த நாளொன்றில்
நாம் கடைசியாய் முத்தமிட்டுக்கொண்டோம்
பூக்களின் மேல்
கைவைப்பது போல்
மிக மென்மையாய் கை குலுக்கி
முட்களின் மேல்
கால் வைப்பது போல்
தரையில் பட்டும் படாமல் நகர்ந்தாய்
ஒரு ஒற்றை நட்சத்திரம்
மிக அதிகமாய் ஒளிர்வது
பார்த்தபடி நெடு நேரம் அமர்ந்திருந்தேன்
கவிதைகளற்ற உலகின்
இருட்டு மவுனம்
பயமுறுத்தியது
சிணுங்கி ஒளிர்கிறது
அந்த ஒற்றை நட்சத்திரம்
இருட்டு
மவுனம் கலைத்தபடி.
No comments:
Post a Comment