Search This Blog

Friday, May 18, 2012

உறைந்துபோன பனிக்கட்டிக்குள்
ஒளிந்திருக்கும் மீன்குட்டி.
சொல்லாத காதல்.

Saturday, May 12, 2012

அம்மா...

அம்மாவிற்கும் அன்பிற்கும் பெரிதாய்
வித்தியாசங்கள் எதுவும் இல்லை
கடைசியிலுள்ள இரெண்டெழுத்து தவிர.

குழந்தைகள் வளர்ந்துகொண்டே 
அம்மாவை மறந்தபடி இருக்கிறார்கள்
அம்மா அம்மாவாகவே 
குழந்தைகளை நினைத்தபடி இருக்கிறாள்

குழந்தைகள் நதியினைப் போல்
பேரிரைச்சலோடு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்
அம்மா குளத்தினைப் போல்
அமைதியாக ஒரே இடத்தில் இருக்கிறாள்

ஓடும் நதிகள் கடலில் கலந்து
சுயங்கள் இழக்கின்றன
தண்ணீர் வற்றினாலும்
குளங்கள் குளங்களாகவே இருக்கின்றன.

குழந்தைகளுக்காய் அம்மாக்கள் 
தரிக்காத வேடங்களே இல்லை.

பசிக்கின்ற வேளைகளில் சமையல்காரியாய்
வலிக்கின்ற வேளைகளில் மருத்துவச்சியாய்
பணிவிடை வேளைகளில் சேவகியாய்
கண்ணீர் வேளைகளில் சினேகிதியாய்
அறிவுறை வேளைகளில் ஆசானாய்
யாதுமாகி நின்றாள் அம்மா.

தட்டாமலே திறந்து
கேட்காமலே கொடுத்து
அம்மா
கால்கள் முளைத்த கடவுளாய் இருக்கிறாள்
நாத்திக குழந்தைகள் 
கடவுளை நம்ப மறுத்தபடியே 
கற்கள் தொழுகின்றனர். 








Sunday, May 6, 2012

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...






“ஏதாவது கொடு” –
முகம் சுருக்கி
செல்லமாய் கேட்கிறாய் நீ.

என்ன வேண்டும் உனக்கு?

கூடலின் போது களைய வேண்டிய உடைகளா?
அணிந்தபின் அலுத்துப் போகும் நகைகளா?

மாலையில் வாடி கசங்கும் மலர்களா?
உரசலில் உடைந்து விடும் வளையல்களா?

என்ன தரட்டும் உனக்கு?

நாம் ஒன்றாயிருந்த
நிமிடங்களின் நினைவுகளை
பரிசளித்துச் செல்கிறேன்
பத்திரமாய் வைத்துக்கொள்
அடுத்த முறை சந்திக்கும்வரை….

************************************************************





எனக்கே தெரியாமல்
எப்படி அறைந்தாய் என்னை
காதல் சிலுவையில்….
************************************************************


 

“ஏதாவது சொல்” 
முகம் சுருக்கி
செல்லமாய் கேட்கிறாய் நீ.

எதைப் பற்றி சொல்வது உன்னிடம்?

நாம் ஒன்றாயிருந்த
கவிதை நொடிகள் பற்றியா?

இதழ்களின் மூலம்
இதயம் தொட்டாயே
அதைப் பற்றியா?

என் காது மடல்களில்
கிசுகிசுத்த ரகசியங்கள் பற்றியா?

உதடுகளின் வழியாய்
உயிரை உறிஞ்சினாயே
அதைப் பற்றியா?

ஆடையும் வெட்கமும்
ஒருசேர களைந்தாயே
அதைப் பற்றியா?

என் நிறமற்ற கனவுகளுக்கு
வர்ணங்கள் தெளித்தாயே
அதைப் பற்றியா?


என் கண்கள் கட்டி
விண்ணுக்கு கூட்டிச் சென்றாயே
அதைப் பற்றியா?


எதைப் பற்றி சொல்வது உன்னிடம்?

நாம் பிரியத் தயாரான
கண்ணிர் நிமிடங்கள் பற்றியா?


உள்ளுக்குள் அழுதுகொண்டு
உதடுகளில் சிரித்தோமே
அதைப் பற்றியா?

உணர்வுகளை உன்னிடம் விடுத்து
உயிர் மட்டும் தாங்கிச் சென்றேனே
அதைப் பற்றியா?

பிரிவதென்று முடிவு செய்தபின்
நெருஞ்சி முட்களை நெஞ்சில்
விதைத்துப் போனாயே
அதைப் பற்றியா?

எதைப் பற்றி சொல்வது உன்னிடம்?
************************************************************



உணவுக்குப் பதிலாய்
மலர்களை தின்கிறாய் நீ!

பூக்களுக்குப் பதிலாய்
நட்சத்திரங்களை சூடிக் கொள்கிறாய்!

கோடை விடுமுறைகளை
நிலவில் கழிக்கிறாய்!

எங்கேனும் செல்ல
கால்களுக்கு பதிலாய்
இறக்கைகள் விரிக்கிறாய்!

வியர்வை சமயங்களில்
மின்விசிறிக்கு பதிலாய்
தென்றலை சுழல விடுகிறாய்!

உதடுகளில் மின்சாரத்தை தேக்கி
உயிருக்கு உயிரளிக்கிறாய்.

பார்ப்பவருக்கெல்லாம்
சந்தோஷங்கள் பரிசளிக்கிறாய்!

ஏதேனும் குறையெனில்
கடவுள் தோன்றி
உன்னிடம் முறையிடுகிறார்!


உண்மையைச் சொல் – யார் நீ!!!

Thursday, May 3, 2012

மனக்குளத்தில் யார் எறிந்தார்
உன் நினைவுக் கல்லை.
கிளர்ந்தெழும்புது வெறுமை அலைகள்.
மரங்களின் மெல்லிய இலைகளில்
காற்று தன் கவிதைகளை
எழுதிக் கொண்டே செல்கிறது.

கவிதைகளில் கிறங்கிய
காதல் மரங்கள்
மனிதன் படிப்பதற்காய்
இலைகள் சொரிகின்றன

காகிதங்களில் கவிதைகள்
கற்காத மனிதனா
இலைகளில் இயற்கை
ரசிக்கப் போகிறான்?

காற்று மீண்டும்
கவிதைகளுடன் அலைகிறது
மரங்கள் மீண்டும்
இலைகளுடன் அழைக்கிறது

உதிர்ந்த கவிதைகளை
பெருக்கிக்கொண்டே இருக்கிறான்
உணர்சிகளற்ற மனிதன் மட்டும்.