அம்மாவிற்கும் அன்பிற்கும் பெரிதாய்
வித்தியாசங்கள் எதுவும் இல்லை
கடைசியிலுள்ள இரெண்டெழுத்து தவிர.
குழந்தைகள் வளர்ந்துகொண்டே
அம்மாவை மறந்தபடி இருக்கிறார்கள்
அம்மா அம்மாவாகவே
குழந்தைகளை நினைத்தபடி இருக்கிறாள்
குழந்தைகள் நதியினைப் போல்
பேரிரைச்சலோடு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்
அம்மா குளத்தினைப் போல்
அமைதியாக ஒரே இடத்தில் இருக்கிறாள்
ஓடும் நதிகள் கடலில் கலந்து
சுயங்கள் இழக்கின்றன
தண்ணீர் வற்றினாலும்
குளங்கள் குளங்களாகவே இருக்கின்றன.
குழந்தைகளுக்காய் அம்மாக்கள்
தரிக்காத வேடங்களே இல்லை.
பசிக்கின்ற வேளைகளில் சமையல்காரியாய்
வலிக்கின்ற வேளைகளில் மருத்துவச்சியாய்
பணிவிடை வேளைகளில் சேவகியாய்
கண்ணீர் வேளைகளில் சினேகிதியாய்
அறிவுறை வேளைகளில் ஆசானாய்
யாதுமாகி நின்றாள் அம்மா.
தட்டாமலே திறந்து
கேட்காமலே கொடுத்து
அம்மா
கால்கள் முளைத்த கடவுளாய் இருக்கிறாள்
நாத்திக குழந்தைகள்
கடவுளை நம்ப மறுத்தபடியே
கற்கள் தொழுகின்றனர்.
No comments:
Post a Comment