“ஏதாவது கொடு” –
முகம் சுருக்கி
செல்லமாய்
கேட்கிறாய் நீ.
என்ன வேண்டும்
உனக்கு?
கூடலின் போது களைய
வேண்டிய உடைகளா?
அணிந்தபின்
அலுத்துப் போகும் நகைகளா?
மாலையில் வாடி
கசங்கும் மலர்களா?
உரசலில் உடைந்து
விடும் வளையல்களா?
என்ன தரட்டும்
உனக்கு?
நாம் ஒன்றாயிருந்த
நிமிடங்களின்
நினைவுகளை
பரிசளித்துச்
செல்கிறேன்
பத்திரமாய்
வைத்துக்கொள்
அடுத்த முறை
சந்திக்கும்வரை….
************************************************************
எனக்கே தெரியாமல்
எப்படி அறைந்தாய்
என்னை
காதல்
சிலுவையில்….
************************************************************
“ஏதாவது
சொல்”
முகம் சுருக்கி
செல்லமாய்
கேட்கிறாய் நீ.
எதைப் பற்றி
சொல்வது உன்னிடம்?
நாம் ஒன்றாயிருந்த
கவிதை நொடிகள்
பற்றியா?
இதழ்களின் மூலம்
இதயம் தொட்டாயே
அதைப் பற்றியா?
என் காது
மடல்களில்
கிசுகிசுத்த
ரகசியங்கள் பற்றியா?
உதடுகளின் வழியாய்
உயிரை உறிஞ்சினாயே
அதைப் பற்றியா?
ஆடையும் வெட்கமும்
ஒருசேர களைந்தாயே
அதைப் பற்றியா?
என் நிறமற்ற
கனவுகளுக்கு
வர்ணங்கள்
தெளித்தாயே
அதைப் பற்றியா?
என் கண்கள் கட்டி
விண்ணுக்கு
கூட்டிச் சென்றாயே
அதைப் பற்றியா?
எதைப் பற்றி
சொல்வது உன்னிடம்?
நாம் பிரியத்
தயாரான
கண்ணிர்
நிமிடங்கள் பற்றியா?
உள்ளுக்குள்
அழுதுகொண்டு
உதடுகளில்
சிரித்தோமே
அதைப் பற்றியா?
உணர்வுகளை
உன்னிடம் விடுத்து
உயிர் மட்டும்
தாங்கிச் சென்றேனே
அதைப் பற்றியா?
பிரிவதென்று
முடிவு செய்தபின்
நெருஞ்சி முட்களை
நெஞ்சில்
விதைத்துப் போனாயே
அதைப் பற்றியா?
எதைப் பற்றி
சொல்வது உன்னிடம்?
************************************************************
உணவுக்குப்
பதிலாய்
மலர்களை
தின்கிறாய் நீ!
பூக்களுக்குப்
பதிலாய்
நட்சத்திரங்களை
சூடிக் கொள்கிறாய்!
கோடை விடுமுறைகளை
நிலவில்
கழிக்கிறாய்!
எங்கேனும் செல்ல
கால்களுக்கு
பதிலாய்
இறக்கைகள்
விரிக்கிறாய்!
வியர்வை
சமயங்களில்
மின்விசிறிக்கு
பதிலாய்
தென்றலை சுழல
விடுகிறாய்!
உதடுகளில்
மின்சாரத்தை தேக்கி
உயிருக்கு
உயிரளிக்கிறாய்.
பார்ப்பவருக்கெல்லாம்
சந்தோஷங்கள்
பரிசளிக்கிறாய்!
ஏதேனும் குறையெனில்
கடவுள் தோன்றி
உன்னிடம் முறையிடுகிறார்!
உண்மையைச் சொல் –
யார் நீ!!!



No comments:
Post a Comment