Search This Blog

Thursday, July 3, 2014

கொஞ்சம் அழலாம்

அழுவதற்கான காரணங்கள் 
ஏதேனும் கிடைக்கலாம் இன்று உங்களுக்கு.

மனம் நிரம்பி சிரிப்பது போல்
மனம் உடைந்து அழுவதும்
உடம்புக்கு நல்லதாய் இருக்கும் 

அவமானம்
இயலாமை 
வலி
தோல்வி
மரணம்
பயம்
பசி
பிரிவு
கோபம் -
இன்றைய கண்ணீருக்கான காரணம்
ஏதேனும் ஒன்றாய் இருக்கலாம்

உங்களுக்கும் உங்கள் கண்ணீருக்கும்
தடையாய் இருப்பது
மீசை மட்டுமெனில்
சவரம் செய்துவிட்டு அழழாம்.
அழாதிருப்பது மட்டும்
ஆண்மையல்ல.

தொண்டைக்கும் வயிற்றுக்கும்
இடையில் பூகம்பமாய் கிளம்பி
சுவாசம் திணற
கண் முழுவதும் கண்ணீரோடு
அழுது விடுங்கள் இன்றேனும்.

ஒரு பிரார்த்தனையின் மௌனமும்
ஒரு அழுகையின் விசும்பலும்
ஒரே அதிர்வைத்தான் ஏற்படுத்துகின்றன

மனமெங்கும் நிரம்பி ததும்பும் துக்கம்
கண் வழியே பொங்கி வழியட்டும்
சிறிதுநாள் காலியாய் கிடக்கட்டும் மனது
மீண்டும் துக்கம் தாங்க ஏதுவாய்.