பேசுவதற்கு விஷயங்கள் அற்று
மௌனத்தில் நகர்கிறது வாழ்க்கை
கனத்த மௌனத்தின் இரைச்சலில்
வெறுமை படர்கிறது மனதெங்கும்.
திருமணத்தால் கொல்லப்பட்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மரித்துக் கிடக்கிறது காதல்
வாதங்கள் விவாதங்களாய் மாறி
சண்டைகளில் சரணடைகின்றன
எல்லா சண்டைகளும்
காமக் கல்லறையில் சவங்களாய்.
பாம்பின் சட்டையாய்
கழற்றி எறியப்படுகின்றன
கோட்பாடுகள், வலிகளின்றி.
வாழ்க்கை நகர்கிறது
விருப்புக்கும் வெறுப்புக்கும்
இடையிலான கோட்டில்.