Search This Blog

Saturday, September 8, 2012




பேசுவதற்கு விஷயங்கள் அற்று
மௌனத்தில் நகர்கிறது வாழ்க்கை

கனத்த மௌனத்தின் இரைச்சலில்
வெறுமை படர்கிறது மனதெங்கும்.

திருமணத்தால் கொல்லப்பட்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மரித்துக் கிடக்கிறது காதல்

வாதங்கள் விவாதங்களாய் மாறி
சண்டைகளில் சரணடைகின்றன

எல்லா சண்டைகளும்
காமக் கல்லறையில் சவங்களாய்.

பாம்பின் சட்டையாய்
கழற்றி எறியப்படுகின்றன
கோட்பாடுகள், வலிகளின்றி.

வாழ்க்கை நகர்கிறது
விருப்புக்கும் வெறுப்புக்கும்
இடையிலான கோட்டில்.

Saturday, September 1, 2012

உடைவாள் தரித்த புத்தர்கள்

புத்தனின் தவம் போல்
சஞ்சலமற்று
மோனத்தில் லயித்திருக்கும்
அந்த குளத்தின் மீன்கள்

எப்போதெனும் வருகின்ற
ஈட்டி வாய் கொக்குகளையும்
அவ்வப்போது வருகின்ற
தூண்டில் மீன் மனிதர்களையும் தாண்டி
குளத்து மீன்களுக்கு பயமொன்றுமில்லை

மேலும் கீழும்
மேடும் பள்ளமும்
விழுந்து புரண்டு
தெறித்துச் சிதறும்
அந்த காட்டாற்றுக்குள்ளும்
மீன்கள் உண்டு

கண் மூடித் திறக்கையில்
பாறையில் மோதலாம்
ஏதெனும் பெரிய மீன்களின் 
வாய்களுக்குள் இரையாகலாம்
எங்கேனும் ஒரு புதைகுழியில்
மரணம் நிகழலாம்
வலை விரிக்கும் மீனவர் தட்டில்
இரவு விருந்தின் குழம்பாய் மாறலாம்

இடதும் வலதுமாய்
பிரிகின்ற வாழ்க்கை

குளக்கரையா காட்டாறா

மவுனத்தின் தழுவலா
மரணத்தின் முத்தமா


மீன்கள் 
குளத்தின் நினைவாய் ஆற்றிலும்
ஆற்றின் நினைவாய் குளத்திலும்

உடைவாள் தரித்த புத்தர்களும்
காவி உடையோடு கர்ணர்களும்
சிரித்தபடி இருக்கின்றனர்

முரண்பாடு அச்சாணியில்
உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது