Search This Blog

Tuesday, November 27, 2012

சொல்ல முடியாத துயரங்களாலும்
காண்பிக்க முடியாத கோபங்களாலும்
வர்ணிக்கப்படுகிறது
வாழ்க்கையின் நிறைய பக்கங்கள்.

Thursday, November 22, 2012

அறியாத நாட்களில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கால் சுவடு பதித்தேன்
அந்த ஈர மனதில்.

காலங்கள் ஓட
ஈரங்கள் காய்ந்து
சுவடுகள் மறையும்.

மிஞ்சிய நினைவுகள் கசிந்தொழுகி
ஈரமாக்கிய மனதில்
பின்னொரு நாளொன்றில்
மெதுவாய் புலப்படும்
சில வண்ணச் சுவடுகள்.

முற்றுப்பெறா கவிதைகள்தான்
முழு அர்த்தங்கள் தருகின்றனவோ?!

Saturday, November 17, 2012



உன்னோடு பேசுவதற்கான விஷயங்கள்
எல்லையற்று விரிகின்றது.

கிரீசின் பொருளாதார வீழ்ச்சி
அமெரிக்க வெளியுறவு கொள்கைகள்
தலித் அமைப்பின் முரண்பாடுகள்
பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகள்
பாப்லொ நெருடா, பாரதி, மணிரத்னம்
கடல் அலைகள் பார்த்தபடி எதேதோ பேசி
அவன் மண் தட்டி புறப்படுகையில்
சொல்லத் தோன்றும் 
"என்னென்னவோ படிக்கிறாய்
என் எண்ணங்கள் தவிர".

நிராகரிப்பின் பயங்கள்
தொண்டைக்குள் விலங்காய்.

காதலை
சொல்லிக் கொல்லவா
சொல்லாமல் செல்லவா.

தொடுவான நிலவும்
தொட்டுச் செல்லும் அலைகள் பார்த்தபடி
சொல்வதற்கான் நாளை நாளையாக்கி
சொல்லாமல் செல்கிறேன்
என் காதலை என்னோடு எடுத்துக்கொண்டு.


Sunday, November 4, 2012

முதுமையில் தனிமை





புதைக்கப்பட்ட உணர்வுகளும்
புதைகுழி வார்த்தைகளுமாய்
நிற்பதையே இலக்காக்கி நகர்கிறது
இந்த முதிய கடிகாரத்தின் முட்கள்.