Search This Blog

Monday, January 16, 2017

விடாமல் பெய்யும் மழை

மழை நாட்கள் மிகவும் மனதிற்கு நெருக்கம்.
மழைக்கு முன்னான குளிர்ச்சி
வெயில் தணிந்த ஒரு இதம்
ஒரு மலரின் வாசனை சேர்ந்த மண் வாசம்

மழை வெவ்வேறு விதமாய் இருக்கிறது
அதிகாலை மழை ஒரு அற்புத சங்கீதம்
ஒரே ராகத்தில் ஒரே தாளத்தில்
ஒரு தவம் போல்
நிதானமாய் அவசரங்களின்றி

மதிய மழை ஒரு ஆச்சரியம்
வெயிலும் மழையும் கலந்து
பளபளப்பாகும் உலகம்
ஓடும் பேருந்துகளில் பட்டு
தெறிக்கும் மழைத்துளிகள்
மழைக்குள்ளே மழையாய்.
ஆரவாரமற்று
ஆனால் உலகை சற்றே நிறுத்திய
அகங்காரத்துடன்.

அந்தி மழை ஒரு கவிதை.
உலகின் அத்தனை அழகும்
அந்தி மழையில் நனைந்து
மீண்டும் பிறக்கிறது
மிக அழகாய்.
சற்றே வெயில் தோய்ந்து
சற்றே நிலவில் சாய்ந்து
குளிரும் காற்றை கட்டி அணைத்தபடி
அந்தி மழை அழகின் அடையாளம்

இரவு மழை ஒரு காதல்.
துல்லிய வானம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திரங்கள்
பளீரிடும் மின்னல்
காதல் போன்று
கண்ணுக்கு தெரியாமல்
பரவிக்கிடக்கும் இருட்டு
இருட்டை பருகும் மழை
மழையை உண்ணும் இருட்டு
கலவியின் பேரானந்தம்.

மழை பெய்த அதிகாலையொன்றில்
மகன் பிறந்தான்
மழை பெய்த இரவொன்றில்
அப்பா விட்டுச் சென்றார்

மழை பெய்து கொண்டே இருக்கிறது என்னுள்.





உனக்கான முத்தத்தை மட்டும்
நான் இன்றும் வைத்துள்ளேன்

என் இத்தனை முத்தங்களில்
உனக்கானது மட்டும் தனியாக உள்ளது

இத்தனை வருடங்களாகியும்
இன்னும் ஈரமாய் இருக்கிறது அது

ஈரம் காய்கின்ற தருணங்களில்
கொஞ்சமாய் என் ரத்தம் தெளிக்கிறேன்


என்றேனும் அதன் ஈரம் சுவைக்கையில்
உனக்கு கொஞ்சமாய்
ஒரு சிவப்பு நினைவுக்கு வரும்


அப்போது இந்த கவிதையை நினைத்துக்கொள்
என் கனவுகளை என்னிடமே விற்றுவிட்டு,
என் நிஜங்களை தின்று கொண்டிருக்கிறாய் நீ.

எதிர்பார்ப்புகளே இலக்கென்கிறாய்
ஏமாற்றங்களே பரிசென்கிறாய்.

இருப்பினும் விழுகிறேன்
ஒவ்வொரு முறையும்.
இம்முறை கடைசி என
சொல்லிக்கொண்டே

உன் வரையறைகள் எனக்கு புரிவதில்லை.
உன் விதிமுறைகள் எனக்கு பிடிப்பதில்லை.

என் புரிதலோ என் பிடித்தலோ
உனக்கு பொருட்டில்லை.

நீ நீயாக இரு
நான் நானாக இருக்கிறேன் என்கிறாய்

தெரு கடக்கையில்
சாலையில் காணும்
சாம்பல் நிற குட்டி பூனை போல்
அலட்சியமாய் நடக்கிறாய்

பெயர் தெரியா மரத்தில் பூத்த
வெள்ளை ஊதா இதழ் பூக்கள்
பார்த்தபடி நான்

நான் நானாக இருப்பதற்கு
நான் நீயாகவும் இருக்க வேண்டும்

"புல் ஷிட்" என நீ சொல்வாய் என நினைத்தேன்
மென்மையாய் சிரித்து
உன் மூன்றாவது சிகரெட்டுக்குள் மூழ்குகிறாய். .


தடங்களின்றி, தடயங்களின்றி
அடியின்றி முடிவின்றி
மறைகின்றன புகை வளையங்கள்

உன் மவுனம் கலைக்க மனமின்றி
நகர்கிறேன்

நாளையும் நீ மாறப்போவதில்லை
நானும்தான்