எகிறிக் குதித்து
கதறி அழுது
கட்டி அணைத்து
கரைகளை
அழைத்துக் கொண்டே
இருக்கிறது அலைகள்
விட்டுத் தொலைத்து
விலகி நடந்து
அலைகளோடு இணக்கமாக
கரைகளுக்கென்னவோ ஆசைதான்
நிலமென்னும் பந்தம்
இடையில் நிற்கும்
கரைதனில்
கரம் வைத்துப் பார்க்க
அலைகளின் துளிகள்
அலைகளை
அலசிப் பார்க்க
கரைகளின் துகள்கள்
ஒன்றுக்கொள் ஒன்றாய்
கலந்த பின்னும்
ஒட்டாது நிற்கும்
கரைகளும் அலைகளும்
அலைகளின் அழுகை
துவர்ப்பாய் மாற்றியது கடலை
இயற்கையின் நியதியால்
சேராது நிற்கும்
கரைகளும் அலைகளும்
ஆண்டாண்டு காலமாய்
கரைகளின் தலை மேல் கால் வைத்து
அலைகளின் கைகளை மிதிக்கிறான்
மனிதன்
சிரித்துக்கொண்டே.
No comments:
Post a Comment