Search This Blog

Sunday, April 27, 2014

இரை விழுங்கும் பாம்பொன்று..



இரை விழுங்கும் பாம்பொன்று
மெதுவாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது அவரை.

இடுப்பு வரை பாம்பின் வாய்க்குள்ளும்
மீதி வெளியிலுமாய் அவர்.

நரைத்த தலை
இடுங்கிய கண்கள்
சுருங்கிய தேகம்
தளர்ந்த உணர்வுகள்.

பாம்பின் வயிற்றுக்குள் இருக்கும் புது உலகம் பற்றி
அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை.

உணர்ச்சிகள் சொல்லாய் மாறாமல்
மௌனமாய் மாறி
அறையை வெப்பப்படுத்துகிறது.

எல்லோரையும் ஒரு நாள் பாம்பு விழுங்கும்
இயற்கையின் நியதி அது எனச் சொல்லி
அவரை பார்த்தபடி நகர்கிறேன்.
நானும் மற்ற அனைவரும்.

முதுமையின் நீண்ட விரல்களும்
விரல் நுனி நகமாய் மரணமும்
வளைக்கின்றன அவரை.

கண் ஓர கண்ணீர் துளியும்
கடைசி வரை சாதித்த மௌனமுமாய்
விழுங்கப்படுகிறார் அவர்.

அவர் இருந்த அறையை
நீண்ட நாட்கள் திறக்கவில்லை
பாம்புக்கும், கண்ணிருக்கும், மௌனத்திற்கும்
பயந்துகொண்டு.


13-01-2012

No comments:

Post a Comment